டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 54 தொகுதிகளில் போட்டியிடும்வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் - எதிர்ப்புத் தெரிவித்து சோனியா காந்தி வீட்டின் முன்பு, காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
Jan 19 2020 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சித் தலைவர் திருமதி. சோனியா காந்தி வீட்டின் முன்பு, காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
70 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு, அடுத்த மாதம் 8-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், பிப்ரவரி மாதம் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.க.,வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதையொட்டி, டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, ஆம் ஆத்மி, பா.ஜ.க., ஆகிய கட்சிகள் அண்மையில் வெளியிட்டன. இந்நிலையில், 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. கிருஷ்ணா தீரத், பட்டேல் நகர் தொகுதியிலும், முன்னாள் டெல்லி அமைச்சர் திரு. அரவிந்தர் லவ்லி காந்தி நகர் தொகுதியிலும் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சித் தலைவர் திருமதி. சோனியா காந்தி வீட்டின் முன்பு, பட்டேல் நகர், கராவல் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கராவல் நகர், படேல் நகர் ஆகிய தொகுதிகளில், திரு. அரவிந்த் சிங், திரு. ஹர்மன் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.