வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இயக்குநர் பாலா அதிகாரபூர்வ அறிவிப்பு - கதை சூர்யாவிற்கு உகந்ததாக இல்லை என்பதால் இந்த முடிவு என அறிவிப்பு
Dec 5 2022 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இயக்குநர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென இப்படி ஒரு அறிவிப்பு ஏன்? பாலாவின் படங்களில் தொடர்ந்து சர்ச்சை எழுவது எதனால்? பாலாவின் படங்களில் முதன்மை சாய்சாக இருக்கும் சூர்யா விலகும் அளவிற்கு இருவருக்குள்ளும் என மனக்கசப்பு? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...
திரைத்துறையில் நுழைந்த போது ஒரு கமர்ஷியல் ஹீராவாகவும், கதாபாத்திர நடிகராகவும் பார்க்கப்பட்டார் நடிகர் சூர்யா. ஆனால் இயக்குநர் பாலாவின் நந்தா திரைப்படத்தில் நடித்த பிறகு ஒரு புடம் போட்ட தங்கமாக உருமாறினார். தமிழ் திரைத்துறை நடிகர் சூர்யா மீதான பார்வையை மாற்றிக்கொண்டது. வலுவான கதாபாத்திரங்கள் சூர்யாவை தேடி வந்தன.
நந்தாவிற்கு பிறகு பிதாமகன் படத்தில் பாலாவும், சூர்யாவும் மீண்டும் இணைந்தனர். அதன் பிறகு தற்போது வணங்கான் படத்தில் இணைந்தனர். தனது படங்களில் சூர்யாவிற்கு மட்டும்தான் மூன்று முறை வாய்ப்பு கொடுத்துள்ளார் பாலா. அந்த அளவிற்கு இருவருக்குமான உறவு ஆழமானது.
என்றாலும் கூட தற்போது வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் பாலா. ஆனால் அதற்காக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை அவர். "கதையில் நிகழ்ந்த சில மாற்றங்கள் சூர்யாவிற்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது". "இதனால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக இருவரும் கலந்து முடிவெடுத்துள்ளோம்" என்று அறிவித்துள்ளார்.
கதை சூர்யாவிற்கு ஏற்றதாக இல்லை என்பதை ரசிகர்களால் நம்ப முடியவில்லை, காரணம் எந்த கதாபாத்திரத்தையும் நடிக்கும் திறமை படைத்த சூர்யா, விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் மட்டும் வந்து ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து விட்டு திரைத்துறையை அதிர வைத்தவர். அப்படியிருக்க பாலாவின் அறிவிப்பிற்கான காரணத்தை ரசிகர்களால் நம்ப முடியவில்லை.
ஆனால் பாலாவின் படங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. நான் கடவுள் படத்தில் அஜீத் நடிப்பதாக இருந்து பின்னர் மனக்கசப்பால் அஜீத் விலகினார். அதன் பிறகு வர்மா படத்தின் படப்பிடிப்பு பாதி முடித்த பிறகு பாலா அதில் இருந்து விலகினார். தற்போது வணங்கான் படம் ஆரம்பம் முதலே சர்ச்சையை சந்தித்து வருகிறது. பல மாதங்களுக்கு முன்பே சூர்யா விலகுவதாக தகவல் வர பின்னர் அந்த செய்தி மறுக்கப்பட்டது. தற்போது சூர்யா விலகி விட்டதாக அதிகாரபூர்வமான செய்தி வெளியாகியுள்ளது. பாலாவின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக அவர் படப்பிடிப்பை இழுத்தடிப்பதே இதற்கு பின்னால் உள்ள காரணம் என கூறப்படுகிறது.