கேரளாவில் வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க வரும் 30-ம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக்கூட்டத்திற்கு ஏற்பாடு - நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி
Aug 21 2018 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த, இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், நிவாரணப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 30-ம் தேதி கேரள சட்டசபையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 2 வார காலமாக பெய்த தொடர் மழையால், பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே, கடந்த சில தினங்களாக மழையின் தாக்கம் குறைந்திருப்பதால், வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனால், கேரளாவின் சில மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசிப்பதற்காக இன்று மாலை 4 மணி அளவில், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலை சீரமைத்தல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நிவாரணப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 30-ம் தேதி கேரள சட்டசபையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முன் வந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.