குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக அமித்ஷா விடுத்த சவாலை ஏற்க தயார் - அகிலேஷ் யாதவ், மாயாவதி அறிவிப்பு
Jan 23 2020 8:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா? என அமித் ஷா விடுத்த சவாலை, திரு. அகிலேஷ் யாதவ் மற்றும் செல்வி. மாயாவதி ஆகியோர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்த, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தயாரா? என்று சவால் விடுத்தார். இந்நிலையில் திரு. அமித் ஷாவின் சவாலுக்கு பதிலளித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் திரு. அகிலேஷ் யாதவ், குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என்றும், ஆனால் நாட்டில் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக, பா.ஜ.க., விவாதம் நடத்த தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போல், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான, செல்வி. மாயாவதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசு விடுத்துள்ள சவாலை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்வதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இவை குறித்து எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நேரடி விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.