நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் - டெல்லியில் வரும் 30-ம் தேதி, அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு
Jan 27 2020 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில், வரும் 30-ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், வரும் 31-ம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டம், வரும் மார்ச் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வரும் 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில், வரும் 30-ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், அனைத்து கட்சிகளும் பங்கேற்குமாறு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல், வரும் 31ம் தேதி மாநிலங்களவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அதன் தலைவர் திரு.வெங்கைய்யா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, வரும் 31-ம் தேதி, பா.ஜ.க. நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.