நிர்பயா பாலியல் வழக்கில் தூக்கு தண்டனைக்கு எதிரான முகேஷின் மேல்முறையீட்டு வழக்கு - மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
Jan 27 2020 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் முகேஷின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஆனால், தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். கருணை மனு, சீராய்வு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் வினய் குமார், அக்ஷய் குமார் சிங், பவன் சிங் ஆகியோர் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், திஹார் சிறை நிர்வாகத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அன்றைய தினமே, குற்றவாளி முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நிராகரித்த நிலையில், அதை நீதித்துறை மறு ஆய்வு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி முகேஷின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் முறையிடவும் அறிவுறுத்தியுள்ளது.