நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு - உச்சநீதிமன்றத்தில் நாளை உத்தரவு
Jan 28 2020 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா பாலியல் வழக்கில், கருணை மனுவை, குடியரசுத் தலைவர் நிராகரித்ததை மறு ஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நிறைவுபெற்றது. நாளைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணை மனு, சீராய்வு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சியில் நிர்பயா குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததை, நீதித்துறை மறு ஆய்வு செய்யக்கோரி, 4 குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவில், நடைமுறை குறைபாடு இருத்தாக குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், தனது அதிகாரத்திற்கு உட்பட்டே குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததாகவும், அனைத்து தகவல்களும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் வாதம் செய்யப்பட்டது. விசாரணை நிறைவுபெற்ற நிலையில், உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.