அயோத்தி அருகே மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை ஏற்றது சன்னி வக்ஃபு வாரியம்
Feb 22 2020 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி தீர்ப்பில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்றது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. அதே நேரம், மசூதி கட்டுவதற்காக, சன்னி வக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மசூதிக்கு நிலத்தை தேர்வு செய்யுமாறு உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அயோத்தி மாவட்டம் சோஹாவல் தாலுகா தன்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கி கொடுத்தது. இந்த நிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சன்னி வக்பு வாரியத்தை சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்ஃபு வாரியம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்று ஆரம்பத்தில் இருந்தே தாங்கள் கூறி வருவதாகவும், எனவே, நிலத்தை ஏற்றுக்கொள்வதை தவிர, தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.