மன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு - விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு
Feb 22 2020 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மன ரீதியான மருத்துவ சிகிச்சை கோரி நிர்பயா வழக்கின் குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும், வரும் 3-ம் தேதி காலை, 6 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள், தங்கள் குடும்பத்தினரை இறுதியாக எப்போது சந்திக்க விரும்புகிறார்கள் எனக் கேட்டு, திஹார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. கடந்த ஒன்றாம் தேதிக்கு முன்னரே குடும்பத்தினரை சந்தித்து விட்டதாக, முகேஷும், பவனும் தெரிவித்துள்ள நிலையில், எஞ்சியுள்ள அக்ஷய், வினய் ஆகியோரின் விருப்பத்தை சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.
குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவுக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு மன ரீதியான சிகிச்சை அளிக்கக் கோரி, வினய் சர்மா தரப்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க பல்வேறு பொய்களை கூறி நாடகமாடுவதாக திகார் சிறை நிர்வாகம் வாதிட்டது. வினய் சர்மா தன்னை தானே காயப்படுத்திக் கொண்டு நாடகமாடுவதாகவும், கடந்த வாரம் தனது வழக்கறிஞர் மற்றும் தாயுடன் இருமுறை பேசியதாகவும், அவரது மனநிலை நன்றாகவே இருக்கிறது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.