டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரும் மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Feb 26 2020 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரும் மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஷாகீன் பாக், ஜப்ரபாத் உள்ளிட்ட பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா உள்ளிட்டோரும் போராட்டம் நடத்தினர். இதில் இருதரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் தகவல் ஆணையர் திரு. வாஜாஹத் ஹபிபுல்லா, பீம் ஆர்மி தலைவர் திரு.சந்திரசேகர் ஆசாத் மற்றும் சமூக ஆர்வலர் திரு.பகதூர் அப்பாஸ் நக்வி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில் டெல்லி வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்ட இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போரை அகற்றக்கோரும் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.