டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய விவகாரம் - பா.ஜ.க., தலைவர்கள் 3 பேர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல்
Feb 27 2020 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய, பா.ஜ.க.வின் திரு. கபில் மிஸ்ரா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பான அறிக்கையை, அம்மாநில உயர்நீதிமன்றத்தில், டெல்லி போலீசார் இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த திரு. கபில் மிஸ்ரா, தனது ஆதரவாளர்கள் அமெரிக்க அதிபரின் வருகைக்காக மட்டுமே அமைதி காக்கின்றனர் என்றும், இல்லையென்றால், டெல்லி போலீஸ் உட்பட யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள் என்றும் பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.க. எம்.பி. திரு. கவுதம் கம்பீர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, மத்திய நிதி இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் மற்றும் பா.ஜ.க., - எம்.பி., திரு. பர்வேஷ் வர்மா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
அவர்களது பேச்சு தொடர்பான வீடியோக்களை, டெல்லி காவல் ஆணையருடன் இணைந்து பார்த்து, உரிய வகையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று, சிறப்பு காவல் ஆணையர் திரு. பர்வேஷ் ரஞ்சனுக்கு, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. மேலும், பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக, இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், டெல்லி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.