கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி : மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்கவும் வங்கிளுக்கு அனுமதி
Mar 28 2020 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார சரிவை எதிர்கொள்ள அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, வாகன, வீட்டு கடன்களுக்கான வட்டியை குறைப்பது, 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ. தவணையை ஒத்திவைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ், கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை எதிர்கொள்வோம் என்றும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் விகிதமான ரெப்போ விகிதம், 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5 புள்ளி 15 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 90 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிர்ணயிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரெப்போ விகிதம் குறைப்பால் வீடு, வானங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பிருப்பதாக் குறிப்பிட்ட ஆர்.பி.ஐ., ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ், வட்டி குறைப்பால் மாதத் தவணைகளின் எண்ணிக்கையும் குறையக் கூடும், வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர், தொழில் துறையினர் மாதத் தவணையை செலுத்துவது 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் கூறினார்.
பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் பாதிப்பால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்றும், கொரோனா வைரஸ் காரணமாக, 150 ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.