ஒரு மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்புங்கள் : முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவு
Mar 31 2020 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், தூங்கும் நேரம் தவிர்த்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள், கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. ஆனாலும், வெளிநாடுகளில் இருந்துவந்த சிலர், அறிவுரைகளை பொருட்படுத்தாமல், சகஜமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, கர்நாடக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வீட்டில், கொரோனா தனிமைபடுத்தலுக்கு உள்ளானவர்கள், தூக்க நேரம் தவிர்த்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை செல்ஃபி எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்ஃபி என்றும், அதில், ஜி.பி.எஸ். தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. செல்ஃபிக்கள் அனைத்தும் புகைப்பட சரிபார்ப்பு குழுவால் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி புகைப்படங்களில் எதேனும் சந்தேகம் எழுந்தாலோ அல்லது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள், மிகப்பெரிய தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.