கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய நிவாரண நிதி : தென் மாநிலங்களை விட வடமாநிலங்களுக்கே அதிக நிதி ஒதுக்கியதாக குற்றச்சாட்டு
Apr 5 2020 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய நிவாரண நிதியில் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களுக்கே அதிக நிதி ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு முதற்கட்டமாக 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு ஆயிரத்து 611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்திற்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 179 பேருக்கு கொரோனா தொற்று உள்ள மத்தியப்பிரதேசத்திற்கு 910 கோடி ரூபாயும், 32 பேருக்கு கொரோனா தொற்று உள்ள பீகாருக்கு 710 கோடி ரூபாயும், 21 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று உள்ள ஒடிசாவிற்கு 810 கோடி ரூபாயும், 210 பேருக்கு நோய்த்தொற்று உள்ள ராஜஸ்தானுக்கு 710 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு 505 கோடியே 50 லட்சம் ரூபாயும், ஆந்திரப்பிரதேசத்திற்கு 505 கோடி ரூபாயும், தெலங்கானாவுக்கு 224 கோடி ரூபாயும், கர்நாடகத்துக்கு 395 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 306 பேருக்கு நோய்த்தொற்றுடன் 4-வது இடத்தில் உள்ள கேரளாவிற்கு 157 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.