வாயுக் கசிவால் உயிர்ப்பலி வாங்கிய விசாகப்பட்டினம் பாலிமர்ஸ் ஆலையை மூட வேண்டும் - ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு
May 26 2020 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி பாலிமர்ஸ் என்னும் ரசாயன ஆலையில் இருந்து, கடந்த 7 ஆம் தேதி விடியற்காலை விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதைச் சுவாசித்த 12 பேர் மரணம் அடைந்த நிலையில், ஆலையின் சுற்றுப்புற கிராமவாசிகளில் 500க்கும் அதிகமானோர் தோல் பாதிப்பு, மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிப்பு அடைந்தனர்.
இதனையடுத்து, ஆந்திர உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து இது குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மேலும் இதுதொடர்பான பொது நல மனுக்களும் ஏற்கப்பட்டன. நேற்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், ஆலை வளாகத்துக்குள் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரனைக் குழுவினரைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆலையின் இயக்குநர்கள் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என்றும், ஆலைக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட எதையும் இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆலை முறையாக பராமரிக்கபட்டதா, முறையான சுற்றுச் சூழல் அனுமதியுடன் இயக்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.