2019-20-ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2%-ஆக குறைந்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கையில் தகவல்
May 27 2020 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2019-20-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 4.2 சதவீதமாக குறைந்துள்ளதாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
2019-20-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி விபரங்களை, வரும் 29-ம் தேதி, தேசிய புள்ளி விவரங்களுக்கான ஆணையம் அறிவிக்கவுள்ளது. கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில், நாட்டின் ஜி.டி.பி., கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 4.7 சதவீதமாக குறைந்த நிலையில், கடைசி காலாண்டின் விகிதம் குறித்து, எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மார்ச் மாதத்தின் கடைசி 7 நாட்களில், 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்படி, கடைசி காலாண்டின் உள்நாட்டு உற்பத்தி, 1.2 சதவீதமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4.2 சதவீதமாக இருக்குமென, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21-ம் நிதியாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி, பூஜ்யத்திற்கும் கீழ் குறைந்து மைனஸ் 6.8-ஆக சரியும் எனவு கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 75 சதவீதத்தை கொண்டுள்ள 10 மாநிலங்களில், மகாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்கள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்த இழப்பில், மகாராஷ்டிரா 15.6 சதவீதத்தையும், தமிழகம் 9.4 சதவீதத்தையும் கொண்டுள்ளது. மேலும், உம்பன் புயல் பாதிப்பு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையால் இந்த அறிக்கையில், ஒருசில மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.