நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நகரங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது எப்படி? - நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மத்திய அரசு முக்கிய ஆலோசனை
May 28 2020 6:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள 13 நகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு. ராஜீவ் கவுபா முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும், வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மும்பை, அகமதாபாத், டெல்லி, தானே, புனே, ஹைதரபாத், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர், இந்த 13 நகரங்களில்தான் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள 13 நகராட்சிகளின் ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு. ராஜீவ் கவுபா, காணொலி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த 13 பகுதிகளில், நாள்தோறும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? வீடுகள் தோறும் ஆய்வுகள் நடைபெறுகின்றனவா? உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் தொடர்பான நோய் இருப்பவர்களைக் கண்டறியவும், இன்ஃபுளூயன்ஸா காய்ச்சல் இருப்பவர்களைக் கண்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிக்கவும், கைகளை அவ்வப்போது கழுவி சுத்தப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.