பேருந்து, ரயில்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
May 28 2020 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, பேருந்து, ரயில்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இன்று இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார். அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து செலவை ஏற்பதில் குழப்பம் நிலவுகிறதே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்? என்றும் கேட்டனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், இதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஏற்க வேண்டும் - சொந்த ஊர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.