கொரோனா தேசிய ஊரடங்கு, மேலும் தளர்வுகளுடன் 5-ம் கட்டமாக நீட்டிக்கப்படுமா? - பாதிப்பு அதிகமுள்ள 13 நகரங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
May 30 2020 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா தேசிய ஊரடங்கு, மேலும் தளர்வுகளுடன் 5-ம் கட்டமாக நீட்டிக்கப்படும் என கூறப்படும் நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள 13 நகரங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ள போதிலும், வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மும்பை, அகமதாபாத், டெல்லி, தானே, புனே, ஹைதரபாத், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர், இந்த 13 நகரங்களில்தான் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு. ராஜீவ் கவுபா, பாதிப்பு அதிகமுள்ள மாநில தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், மிகக்குறைந்த கட்டுப்பாடுகளுடன் தேசிய ஊரடங்கை 5-ம் கட்டமாக நீட்டிக்கவும், கொரோனா பரவல் அதிகமுள்ள 13 நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.