இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது
Jun 4 2020 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில், நேற்று ஒரே நாளில், 9 ஆயிரத்து 638 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது.
அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவில் காட்டுத் தீ போல் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 9 ஆயிரத்து 638பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 2 ஆயிரத்து 560 பேரும், டெல்லியில், ஆயிரத்து 513 பேரும் நேற்று ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே, கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில், 74 ஆயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக, டெல்லியில், 23 ஆயிரத்து 645 பேரும், குஜராத் மாநிலத்தில் 18 ஆயிரத்து 117 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில், 9 ஆயிரத்து 652 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும், 1 லட்சத்து 4ஆயிரத்து 285 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 1 லட்சத்து 6 ஆயிரத்து 653 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனாவுக்கு 6 ஆயிரத்து 88 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.