கொரோனா சிகிச்சைக்கான ஆர்செனிக் ஆல்பம் மருந்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் குணப்படுத்துகிறது - ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தகவல்
Jun 5 2020 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் ஆர்செனிக் ஆல்பம் 30சி மருந்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் வைரஸ் தொற்றை குணப்படுத்துவதாக ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக, ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30சி, எளிமையான தடுப்பு மருந்தாகச் செயல்படும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தது. மத்திய அரசின் பரிந்துரையை அடுத்து, இந்த மருந்து, தமிழகம், கர்நாடாகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஆர்செனிக் ஆல்பம் 30சி மருந்து பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தேசிய தொற்றுநோய் நிலைய இயக்குனர் மருத்துவர் பிரதீப் கவுர், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டார். இதனை ஓமியோபதி மருத்துவ கவுன்சில் முற்றிலும் மறுத்துள்ளது. இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும், இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம் என்றும், தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் மருத்துவர் ஆர். ஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை குணப்படுத்த அலோபதி மருத்துவத்தில் மருந்துகள் எதுவும் தற்போதுவரை இல்லை என்ற நிலையில், வைரஸ் தொற்றை குணப்படுத்தும் ஆர்செனிக் ஆல்பம் 30சி ஓமியோ மருந்து மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.