கேரளாவில், கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் 3 பேரிடம் தீவிர விசாரணை - அரசியலாக்கி அரசுக்கு எதிராக பிரச்சாரம் நடப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
Jun 5 2020 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அன்னாசி பழத்தில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தை பயன்படுத்தி மாநிலத்தின் மரியாதையை சிதைக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானை ஒன்று, வெள்ளியாற்றில், நின்ற நிலையிலேயே இறந்து கிடந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த கர்ப்பிணி யானை, உணவு தேடி பாலக்காட்டில் உள்ள கிராமத்திற்குச் சென்றபோது, விஷமிகள் சிலர் அன்னாசி பழத்திற்குள் நாட்டு வெடிகுண்டை மறைத்துவைத்து யானைக்கு கொடுத்ததும், அதனை உட்கொண்ட யானை, பட்டாசு வெடித்து பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு காரணமான விஷமிகள் மீது, வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அன்னாசி பழத்தில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்து கருவுற்ற யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கேரள வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாநிலத்தின் நற்பெயரையும், மலப்புரம் மாவட்டத்தின் பெயரையும் கெடுக்க திட்டமிட்டு பிரச்சாரம் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் நடைபெற்றது பாலக்காடு மாவட்டத்தில்தானே தவிர மலப்புரம் மாவட்டத்தில் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.