வெடி வைத்து, யானை கொல்லப்பட்ட வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - கேரள வனத்துறைக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
Jun 5 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, கேரள வனத்துறைக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக, ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் திரு. சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, வன விலங்குகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, கேரள தலைமை வனக் காவலர் தலைமையில், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால நிர்வாக திட்டத்தை சமர்ப்பிக்க இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
யானை கொல்லப்பட்ட வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணை, கைது நடவடிக்கைகள் மற்றும் யானை இறப்புக்கு காரணமானவர்களிடம் இழப்பீடு வசூல் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய மற்றும் கேரள வனத்துறைக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை அடுத்த மாதம் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.