உத்தரப்பிரதேசத்தில் 8 காவலர்கள் கொல்லப்பட்ட வழக்கு - ரவுடி விகாஸ் துபே, கோவிலில் வைத்து கைது செய்யப்படவில்லை என மத்தியப்பிரதேச அரசு விளக்கம்
Jul 9 2020 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசத்தில் 8 காவலர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் கோவிலை இழுக்க வேண்டாம் என மத்தியப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே மீது கொலை, கொள்ளை, கொலைமுயற்சி, கொலைமிரட்டல் என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவனைப்பிடிக்க, அவன் தங்கியிருந்த திக்ரு கிராமத்திற்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற காவலர்கள் மீது, ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் 8 காவலர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் உத்தரப்பிரதேத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர்களை கொன்று தப்பியோடிய ரவுடி கும்பலை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ரவுடி விகாஸ் துபேயின் வீடு, பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் தரைமட்டமாக்கப்பட்டது. அவனது முக்கிய குற்றவாளி அமர் துபே நேற்று சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றுமொறு முக்கிய கூட்டளி, இன்று காலை கான்பூரில் நடந்த என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளான். அவன், கோயிலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதனை மத்தியப்பிரதேச அரசு மறுத்துள்ளது. ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேச போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், உத்தரப்பிரதேச போலீசார் அழைத்து சென்றதாகவும், இதில் கோவிலை இழுக்க வேண்டாம் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.