சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது - மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே நடவடிக்கை என அரசு தகவல்
Jul 9 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என்றும், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பாட சுமையை குறைப்பதாக சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து, குடியுரிமை, கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட 30 சதவீத பாடங்கள் முழுமையாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாடத்திட்டம் குறைப்பு என்ற பெயரில், தங்களது சொந்த விருப்பத்தை பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளதாகவும், பாரதிய ஜனதாவின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைப்பில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என்றும், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார். மாணவர்களின் கல்வி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.