லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப்பெற்றது சீனா - இந்திய ராணுவம் தகவல்
Jul 9 2020 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-சீனா இடையே மோதல் நடைபெற்ற லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் கடந்த மே 5-ம் தேதி சீன ராணுவம் முதல் முறையாக அத்துமீறியது. இதைத்தொடர்ந்து எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிய சீனா, கடந்த மாதம் 15, 16ம் தேதிகளில் கல்வான் பள்ளத்தாக்கை முழுவதும் கைப்பற்ற முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட ராணுவ மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், அதிகாரிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 6-ம் தேதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து, லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முன்னணி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த சீன வீரர்கள், அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் கட்டுப்பாட்டு பகுதி 14,15,17 ஆகிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.