கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு - வைரசுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய தருணம் இதுவல்ல என முதல்வர் பினராயி விஜயன் கருத்து
Jul 11 2020 1:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய தருணம் இதுவல்ல என முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி தொற்று எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக உள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், கேரள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும், எனவே, கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல என்றும், கொரோனாவை ஒருமுறை கட்டுப்படுத்தியுள்ள நாம், மீண்டும் ஒன்றிணைந்து அதை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். சமூக விலகலை பின்பற்றுவதுடன், முகக்கவசம் அணிந்து, கைகளை அவ்வப்போது கழுவி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் திரு. பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.