பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என யு.ஜி.சி. தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொரோனா ஊரடங்கு நீடிப்பதால், பல மாநிலங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதனால், கல்லுாரி, பல்கலை மாணவர்களுக்கான, இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., 'இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள், ஏற்கனவே, பல்கலை, கல்லுாரிகளுக்கான தேர்வுகளை ரத்து செய்துள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.
எந்த ஒரு கல்வி முறையிலும், மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்வது மிகவும் அவசியம். தேர்வுகள் வாயிலாக பெறும் மதிப்பெண்கள், மாணவர்களுக்கு, நம்பிக்கையையும், திருப்தியையும் அளிக்கின்றன என யு.ஜி.சி., விளக்கம் அளித்துள்ளது. யு.ஜி.சி., பிறப்பித்துள்ள உத்தரவால், ஏற்கனவே தேர்வுகளை ரத்து செய்துள்ள, பல மாநில அரசுகள், தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. யு.ஜி.சி.,யின் முடிவுக்கு, மாணவர்கள், பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், பல்கலை, கல்லுாரிகள் தேர்வுகள் விஷயத்தில், மத்திய அரசும், யு.ஜி.சி.,யும் தீர்க்கமான முடிவை எடுக்கும் என தெரிகிறது.