விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பேசியதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. சுந்தர் பிச்சையுடன், காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் திரு. நரேந்திர மோதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வேலை சூழலில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர் குறித்து, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பேசியதாக பிரதமர் திரு. நரேந்திர மோதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான கலந்துரையாடல், மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்கள், தகவல் பாதுகாப்பு குறித்து விவாதித்ததாகவும், கல்வி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் கூகுளின் செயல்பாடு குறித்து கேட்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்து சுந்தர் பிச்சையுடன் ஆலோசித்ததாகவும், கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை போன்ற பல துறைகளில் கூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளைப் பற்றி மேலும் அறிந்து கொண்டதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் திரு. மோதியுடனான ஆலோசனைக்கு பிறகு, கூகுள் தலைமை செயல் அதிகாரி திரு. சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில், கூகுள் நிறுவனம் சார்பில் இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில், 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.