ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது - சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி
Aug 14 2020 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டுக்கு எதிராக, துணை முதலமைச்சரும், காங்கிரஸ் அதிருப்தித் தலைவருமான திரு. சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, துணை முதலமைச்சர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து திரு. பைலட் நீக்கப்பட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், அவருக்கு ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை, திரு. சச்சின் பைலட் டெல்லியில், கடந்த 10-ம் தேதி சந்தித்துப் பேசினார். இதை தொடர்ந்து முதலமைச்சர் திரு. அசோக் கெலாட், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ஜெய்ப்பூரில் கூட்டினார். இதில், தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்ட திரு.சச்சின் பைலட்டை, முதலமைச்சர் அசோக் கெலாட் கைகுலுக்கி வரவேற்றார்.
இந்நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.