கேரளாவில், விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதன் எதிரொலி - தனிமைப்படுத்திக் கொண்டார் முதலமைச்சர் பினராயி விஜயன்
Aug 14 2020 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தனிமைப்படுத்திக் கொண்டார்.
துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் பலியாகினர். இதில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கோழிக்கோட்டில் விபத்து நிகழ்ந்த இடத்தை, நேரில் பார்வையிட்டதை அடுத்து, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி.கே.கே.ஷைலஜா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுக்கு பதிலாக, தேவசம் போர்டு அமைச்சர் திரு. கடக்கம்பள்ளி சுரேந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.