நடவடிக்கைக்கு உள்ளான எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேறாததால் மீண்டும் சர்ச்சை - நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது மாநிலங்களவை
Sep 21 2020 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள், அவையை விட்டு வெளியேறாததால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வேளாண் மசோதாக்கள் நேற்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநிலங்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு, மசோதாக்களை அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் முற்றிலுமாக நிராகரித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உரத்த குரலில் கண்டன முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தபோது, அந்த அமளிக்கிடையே, மசோதாக்கள் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், தேசிய மாநாட்டுக் காட்சி, ஆம்ஆத்மி உள்ளிட்ட 12 கட்சிகளின் உறுப்பினர்கள், மாநிலங்களவைத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.
இதனிடையே இன்று அவைக் கூடியதும், மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டதாகக்கூறி, எம்.பிக்கள் திரு. தெரிக் ஓ பிரையன், திரு. இளமாறன் கரீம், திரு. சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேரை ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்வதாக அவைத்தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு உத்தரவு பிறப்பித்தார். மாநிலங்களவை துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நிராகரித்தார். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள், அவையைவிட்டு வெளியேறாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.