நாடாளுமன்ற மாநிலங்களவைக் கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு - மறுதேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு
Sep 23 2020 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மாநிலங்களவை மழைக்காலக் கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே இன்றுடன் நிறைவுபெற்று, அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ள கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும், மாநிலங்களவைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே புதிய வேளாண் மசோதாக்கள், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, மாநிலங்களவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக முன்கூட்டியே இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் மாநிலங்களவை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.