போதைப்பொருளை வாங்குவதற்காக தனக்கு நெருக்கமானவர்களை நடிகர் சுஷாந்த்சிங் பயன்படுத்திக் கொண்டதாக நடிகை ரியா சக்கரபோர்த்தி குற்றச்சாட்டு
Sep 23 2020 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங், போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததாகவும், போதைப்பொருளை வாங்குவதற்கு அவருக்கு நெருக்கமானவர்களை பயன்படுத்திக் கொண்டதாகவும், நடிகை ரியா சக்கரபோர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில், சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தியை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, நடிகை ரியாவின் சகோதரர் Showik-க்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகை ரியா சக்கரபோர்த்தியின் நீதிமன்றக் காவல் வரும் அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் Showik ஆகியோர் ஜாமின் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியதாக ரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நடிகர் சுஷாந்த் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், அவரிடம் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரையும் போதைப்பொருளை வாங்குவதற்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் ரியா ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுக்கள், மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருந்தது. கனமழை காரணமாக மும்பை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜாமின் மனுக்கள் நாளை விசாரணைக்கு வரவுள்ளன.