ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் - டெல்லி சட்டப்பேரவை செயலாளருக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Sep 23 2020 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளிக்க டெல்லி சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி கலவரம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் வெறுக்கத்தக்க பதிவுகள் தொடர்பாக அந்நிறுவனம் வேண்டுமென்றே நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அண்மையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து ஃபேஸ்புக் இந்தியா நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான டெல்லி சட்டமன்ற குழு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ஃபேஸ்புக் நிர்வாகிகள் இதற்காக ஆஜராகாமல் தவிர்த்தனர். அதற்கு பதிலாக, ஃபேஸ்புக் அறக்கட்டளை மற்றும் பாதுகாப்பு இயக்குனர் விக்ரம் லாங்கே கையெழுத்திட்ட ஒரு கடிதம் சட்டமன்றகுழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஃபேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜித் மோகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு குற்றவாளியாக சம்மன் அனுப்பப்படவில்லை என்றும், ஃபேஸ்புக் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டது என்றும் டெல்லி சட்டப்பேரவைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பதிலளிக்குமாறு டெல்லி சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.