ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்கள் தொழில்நுட்ப தேவைகளை சரிவர நிறைவேற்றவில்லை - சி.ஏ.ஜி. புகார்
Sep 24 2020 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்கள் முழுமையான தொழில்நுட்பங்களை தற்போது வரை வழங்கவில்லை என மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக, 10 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் 5 விமானங்கள், ஃபிரான்சிலேயே பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5 விமானங்கள், கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன. இந்த விமானங்கள் கடந்த 10-ம் தேதி இந்திய விமானப்படையின் 17-வது படைப்பிரிவான கோல்டன் ஏரோஸ் பிரிவில் முறைப்படி இணைக்கப்பட்டன. இந்நிலையில், ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்கள் முழுமையான தொழில்நுட்பங்களை தற்போதுவரை வழங்கவில்லை என மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், ரஃபேல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஃபேல் விமானம், அதில் பொருத்தும் ஏவுகணை ஆகியவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான உயர்தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்கு ஃபிரான்ஸ் நிறுவனங்கள் வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஆனால் அவை தற்போதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தொழில்நுட்பங்களை பெறுவது தொடர்பான கொள்கை மற்றும் அதன் அமலாக்கம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இலகுரக போர் விமானமான தேஜசுக்குரிய எஞ்ஜினை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் ஃபிரான்ஸ் நிறுவனம் இன்னும் வழங்க வேண்டியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.