பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28 தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Sep 25 2020 2:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நெருக்கடிக்கு இடையே பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடைமுறைகள் அம்மாநிலத்தில் அமலுக்கு வந்தன.
பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதலமைச்சர் திரு. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், திரு. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தற்போதே வியூகம் அமைத்து வருகின்றன. இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, பீகார் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் அறிவித்தார்.
பீகாரில் 7 கோடியே 29 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், தேர்தலுக்கு ஒரு லட்சத்து 89 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா நோய்த்தொற்றை தடுக்க தேர்தல் பணியாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு கவச உடைகள், முகக்கவசங்கள், சானிடைசர்கள் வழங்கப்படும் என்று கூறினார். 46 லட்சம் முகக்கவசங்கள், 23 லட்சம் கையுறைகள், 8 லட்சம் சானிடைசர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயிரத்து 500 நபர்களுக்கு பதிலாக ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், வாக்களிப்பதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும் என்றும் கூறினார். பிரச்சாரத்தின் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு திரு. சுனில் அரோரா வலியுறுத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, பீகாரில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.