பிரான்சிடமிருந்து இந்திய வாங்கியிருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் - வரும் ஏப்ரல் மாதத்துக்குள் மேலும் 16 ரஃபேல் விமானங்கள் வந்து சேரும் என தகவல்
Oct 28 2020 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய விமானப்படைக்காக பிரான்ஸிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானங்களில் மேலும் 16 விமானங்கள், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியா வரவுள்ளன.
ஃபிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக, 10 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் 5 விமானங்கள், ஃபிரான்சிலேயே பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5 விமானங்கள், கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன. இந்த விமானங்கள், கடந்த மாதம் 10-ம் தேதி இந்திய விமானப்படையின் 17-வது படைப்பிரிவான கோல்டன் ஏரோஸ் பிரிவில், முறைப்படி இணைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்திய விமானப்படைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக 16 ரஃபேல் போர் விமானங்கள், ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியா வரவுள்ளன. அடுத்த மாதம் 3 விமானங்கள், வரும் ஜனவரியில் 3 விமானங்கள் என படிப்படியாக இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இவை அனைத்தும் நேரடியாக ஹரியானா மாநிலம் அம்பாலா விமான தளத்தில் வந்திறங்கும் என்றும், இவை அனைத்தும் விமானப்படையின் கோல்டன் ஏரோஸ் பிரிவில் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.