சிறு விவசாயிகள், சிறு தொழில்களை அழிக்கவே பண மதிப்பிழப்பும், ஊரடங்கும் செயல் படுத்தப்பட்டது - மத்திய பா.ஜ.க. அரசு, மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Oct 28 2020 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அழிக்கவே மத்திய பா.ஜ.க. அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததாகவும், ஊரடங்கை அமல்படுத்தியுதாகவும் திரு. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவை தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திரு. ராகுல் காந்தி, பீகாரின் பால்மிகி நகரில் இன்று பிரச்சாரம் செய்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நாட்டை சரியாக வழிநடத்திய காங்கிரஸ், ஒரு விஷயத்தில் கோட்டை விட்டதாகவும், பிரதமர் அளவுக்கு தங்களுக்கு பொய் உரைக்க தெரியாததே அது என்றும் திரு. ராகுல் கூறினார்.
பொருளாதாரம், வேலையின்மை போன்ற உள்நாட்டு பிரச்சனைகளை பிரதமர் திரு. மோதி பேசுவதில்லை என்று திரு. ராகுல் குற்றம்சாட்டினார். நாட்டில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது பெரும் முதலாளிகள் யாரவது வங்கி வாசலில் நின்றனரா? எனக் கேள்வி எழுப்பிய திரு. ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஊரடங்கும், சிறு விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களை அழிக்கவே கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.