விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதால் உள்துறை அமைச்சர் அமித்ஷா சக அமைச்சர்களுடன் அவசர பேச்சுவார்த்தை - பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்தித்து நிலவரம் குறித்து ஆலோசனை
Dec 1 2020 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6-வது நாளாக தீவிரம் அடைந்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் டெல்லி சலோ போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு, பகல் என பாராமல், 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து டெல்லியை நோக்கி வந்து வண்ணம் உள்ளனர். டெல்லி காஸிப்பூர் எல்லையில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு வேலிகளை டிராக்டர் மூலம் இடித்து தள்ளி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், நிலைமையை சமாளிக்க, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஆகியோர், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாக, உத்தரப்பிரதேசம் - டெல்லி எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.