தலைநகர் டெல்லியில் ஏழாவது நாளாக தொடரும் போராட்டம் - விவசாயிகளுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
Dec 2 2020 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க., அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் திரண்டு 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அகற்ற வழிவகுக்கும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
மேலும் பெரிய நிறுவனங்களின் கருணையை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு தள்ளி விடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் திரு. நரேந்திர சிங் தோமர், திரு. பியுஷ் கோயல் ஆகியோர், 34 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கலாம் என அரசு தரப்பில் முன்மொழியப்பட்டது. அந்த குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை நிபுணர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகளை இடம் பெற செய்யலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் திட்டத்தை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திரசிங் தோமர், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தாகவும், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நாளை நடைபெறும் கூட்டத்தில், வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வலியுறுத்தப்படும் என்றும், தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் திரு. பிரேம் சிங் தெரிவித்தார்.