டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து - நடிகை கங்கனா ரணாவத் மன்னிப்பு கோர வேண்டும் என பஞ்சாப் வழக்கறிஞர் நோட்டீஸ்
Dec 2 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மூதாட்டியை அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துகளை தெரிவித்ததற்காக, நடிகை கங்கனா ரணாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென, பஞ்சாபை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் கடந்த 29-ம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 82 வயது மூதாட்டியை, அவமதிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷாகின்பக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பல்கிஸ் என்ற மூதாட்டியை போன்றே, இந்த மூதாட்டியும், 100 ரூபாய் கொடுத்து போராட்டத்திற்கு வரவழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, சிர்க்காபூரை சேர்ந்த ஹகம் சிங் என்ற வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உரிமைக்காக போராடும் விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் கருத்துகளை தெரிவித்ததற்காக, 7 நாட்களுக்குள் கங்கனா ரணாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கனா குறிப்பிட்டிருந்த பல்கீஸ் என்ற மூதாட்டி, ஷாகின்பக் போராட்டத்தில் முன்மாதியாரியாக திகழ்ந்ததற்காக, BBC வெளியிட்ட 2020-ம் ஆண்டின் 100 சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.