குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி - டெல்லி காவல் துறை அனுமதி
Jan 24 2021 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த காவல் துறை அனுமதித்துள்ளது.
மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காத மத்திய அரசைக் கண்டித்து, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து டெல்லி காவல் துறையே முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் சிங்கு, திக்ரி, காசிப்பூர், பால்வால், சாஜகான்பூர் ஆகிய 5 இடங்கள் வழியாக டிராக்டர்களில் செல்வது என்றும், மொத்தம் நூறு கிலோ மீட்டர் தொலைவுக்குப் பேரணி நடத்துவது என்றும் விவசாயிகள் முடிவு செய்து காவல் துறையிடம் அனுமதி கோரினர். அமைதியான முறையில் பேரணியை நடத்திக்கொள்ளலாம் என்றும், பேரணி முடிந்ததும் வந்த வழியாக விவசாயிகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கூறி டெல்லி காவல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.