எல்லையில் அமைதி நிலவ போர் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கடைபிடிக்க உறுதி - இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் கூட்டறிக்கை வெளியீடு
Feb 26 2021 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவ போர் நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கடைபிடிக்க உறுதி எடுத்து, இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துவதால், இரு நாட்டு எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின், இரு தரப்பினரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அதில், 2003-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, எல்லையில் இரு நாடுகளும், போர் நிறுத்தத்தை உறுதியாக கடைபிடிக்கப்போவதாகவும், உடனடியாக இது அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் அமைதி நிலவ, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையிலான நேரடி தொலைத் தொடர்புகள், கொடி அணிவகுப்புகள் மூலம் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தானின் இந்த அமைதி முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனிடையே, பாகிஸ்தானுடன் சுமூகமான உறவில் இருக்கவே இந்தியா விரும்புவதாகவும், முக்கியப் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.