புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்
Feb 26 2021 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், 93-வது நாளாக இன்றும் தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையே, குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையை காரணம்காட்டி, விவசாயிகளுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் போராட்டத்தை மிகுந்த கவனத்துடனும், உணர்வுப்பூர்வமாகவும் மத்திய அரசு அணுகி வருவதா கூறினார். ஆனால், புதிய வேளாண் சட்டங்களில் என்ன பிரச்சனை உள்ளது என்பது குறித்தும், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவு குறித்தும் விவசாய சங்கங்கள் பதிலளிக்கவில்லை என்றும், இதுவே, இழுபறிக்கு காரணம் என்றும் திரு. தோமர் தெரிவித்தார். அரசின் முடிவு தொடர்பாக விவசாய சங்கங்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தால், எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.