மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக, திரிணமூல் காங்கிரசிலிருந்து விலகிய சுவேந்து அதிகாரி களமிறங்குகிறார் - பா.ஜ.க., மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்
Mar 5 2021 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜிக்கு எதிராக, திரிணமூல் காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.க.,வில் சேர்ந்த திரு. சுவேந்து அதிகாரியை களமிறக்க, பா.ஜ.க., மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 38 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பா.ஜ.க., - இடதுசாரி காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மேற்கு வங்க அமைச்சராக இருந்த, திரிணமூல் காங்கிரசைச் சேர்ந்த திரு. சுவேந்து அதிகாரி, சில மாதங்களுக்கு முன்பு, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.,வில் இணைந்தார்.
இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில், நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என, மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான செல்வி மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இந்நிலையில், செல்வி மம்தா பானர்ஜிக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில், நந்திகிராம் தொகுதியில், அவரை எதிர்த்து பா.ஜ.க., சார்பில், திரு. சுவேந்து அதிகாரியை களமிறக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போல், செல்வி மம்தா பானர்ஜி போட்டியிடும் மற்றொரு தொகுதியான பவானிபூரில், பா.ஜ.க., எம்.பி., திரு. பாபுல் சுப்ரியாவை களமிறக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, செல்வி மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ.க., சார்பில் போட்டியிட உள்ள திரு. சுவேந்து அதிகாரி, திரு. பாபுல் சுப்ரியோ ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.