சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி - பெட்ரோல், டீசல் விலையில் 6 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை
Mar 5 2021 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 6-வது நாளாக இன்றும் எந்த மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த ஆண்டு ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கடந்த ஜனவரியில் இருந்து மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் பெட்ரோல், டீசல் உயர்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். நாட்டின் பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.
அதேநேரம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 6 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல், லிட்டர் 93 ரூபாய் 11 காசுகளாகவும், டீசல் லிட்டர் 86 ரூபாய் 45 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது. அடுத்த மாத இறுதி வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வில் எந்த வித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.