முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளர், மர்ம மரணம் - தற்கொலை என போலீசார் தரப்பில் தகவல் அளித்ததாக மனைவி பேட்டி
Mar 6 2021 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட இல்லம், மும்பையில் உள்ளது. அண்டிலியா என்ற பெயருடன் உள்ள இந்த வீடு, உலகில் விலை உயர்ந்த வீடாக கருதப்படுகிறது. கடந்த 25-ம் தேதி, அம்பானியின் சொகுசு இல்லத்திற்கு வெளியே சந்தேகத்துக்கு இடமான வகையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. தகவல் அறிந்த மும்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரின் உள்ளே வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் கைப்பற்றப்பட்ட கார் திருடப்பட்டு வந்ததாகவும், காரின் உரிமையாளரான தொழிலதிபர் ஹிரண் மன்சுக்கிடம் அதுகுறித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத சதி இருப்பதாகவும் போலீசார் கூறினர். விசாரணைக்கு இடையே, இச்சம்பவத்திற்கு jaish ul hind என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவருடைய உடல் மும்ப்ரா ரெட்டி பந்தர் சாலையை ஒட்டிய ஓடைக்கரையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த கார் பற்றிய விசாரணையில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.