புதுச்சேரி அரசியலில் நீடிக்கும் குழப்பம் - கூட்டணி குறித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிதான் அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி
Mar 6 2021 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவிவரும் சூழலில் கூட்டணி குறித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் திரு.ரங்கசாமிதான் அறிவிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க தலைவர் திரு.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பா.ஜ.க.வும், என்.ஆர். காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.க. அதிகாரிப்பூர்வமாக அறிவிக்காததால் என்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் உலா வந்தன. இந்தவேளையில் என்.ஆர். காங்கிரசை, கூட்டணிக்கு தலைமையேற்க திமுக அழைத்ததாகவும், இதற்கு முன்னாள் முதலமைச்சர் திரு.ரங்கசாமி இசைவு தந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நகர்வுகளால் மீண்டும் உச்சகட்ட பரபரப்புக்கு போனது புதுச்சேரி அரசியல். இந்தநிலையில் என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க.விற்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் கூட்டணி குறித்த முடிவை திரு.ரங்கசாமிதான் அறிவிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் திரு.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.