கோவிஷீல்டு 2-வது டோசுக்கான இடைவெளி அதிகரிப்பு - 12-லிருந்து 16 வாரங்களுக்குப் பிறகு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்த, தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை
May 14 2021 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போடுவதற்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் வரை அதிகரிக்க மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரையும் பாதுகாக்க, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கும், அதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது, பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் டோஸ், 2வது டோஸ் என இரண்டு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் டோஸ் போட்டுக் கொண்ட 28 நாட்களுக்குப் பிறகு 2வது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதனையடுத்து, தடுப்பூசி மருந்து சிறந்த பலனளிக்க ஏதுவாக முதல் டோஸ் போட்டுக் கொண்ட ஆறிலிருந்து 8 வாரங்களுக்குப் பிறகு 2வது டோஸ் தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தின் முதல் டோஸ் மற்றும் 2வது டோசுக்கு இடையேயான காலத்தை 12 லிருந்து 16 வாரங்கள் வரை அதிகரித்து தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதாவது முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட 12ல் இருந்து 16 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி மருந்து 2 டோஸ்களுக்கான இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.